Saturday, December 19, 2009

தாராவும் குகை மனிதர்களும்

வணக்கம் நண்பர்களே,
2009ல் பதிப்பகங்கள் மூலம் வெளியிடப்படும் சித்திரக்கதை இதழ்களில் இராஜகம்பீரம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கும் மற்றுமொரு சித்திரக்கதை "தாராவும் குகை மனிதர்களும்". சமீபத்தில் வாங்கிய இந்த புத்தகத்தை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.



மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ள இந்த இதழின் ஆசிரியர் இராஜதிலகம் ஆவார். அயல்நாட்டு கதை வரிசை ஒன்றை மொழிபெயர்த்து கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. தாரா என்ற செவிந்திய வீரன் தான் கதையின் நாயகன். செவிந்திய வீரன் என்றவுடன் நமது கெளபாய் கதைகளை நினைத்துகொள்ள வேண்டாம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் காலத்து செவிந்திய வீரன் தான் இந்த தாரா. (டைனோசர்கள் காலத்தில் மனிதர்கள்??)


 
கதை என்னவென்று பார்ப்போமா?

செவிந்திய வீரன் தாராவிற்கு நாகரித்தில் இன்னும் பின்தங்கிய குகைவாழ் மனிதர்களின் நட்பு கிடைக்கிறது. தாரா அவர்களுக்கு படகு ஓட்டுவது நெருப்பை பயன்படுத்துவது என புதிய விஷயங்கள் பல கற்றுகொடுத்து உதவி செய்கிறான். அவர்களுக்கு புதிய வாழ்விடத்தை தேடி கொடுக்கிறான். இந்த செயல்களை செய்யும் போது அவனுக்கு நேரிடும் இன்னல்கள் தான் கதை. அப்படியென்ன இன்னல்கள்?? வேறு ஒன்றும் இல்லை. 2 பக்கத்திற்கு ஒருமுறை எதாவது கொடிய விலங்கு தாராவையும் அவன் உடன் இருக்கும் நண்பன் அந்தாரையும் தாக்க வருகிறது. அதையெல்லாம் விதவிதமாக அம்பு விட்டு கொல்கிறார்கள். இப்படியாக கதை போகிறது. இந்த புத்தகத்தில் இரண்டு கதைகள் தொகுக்கப்பட்டிருகிறது.

1. தாராவும் குகை மனிதர்களும்

2. நெருப்பு உண்டக்குவோரின் யுத்தம்



அட்டைபடம் பாத்தவுடன் மனசில் ஒட்டிகொள்கிறது. மொழி நடை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். கதை அப்படி ஒன்றும் சுவாரிஸ்யாமாக இல்லையென்றாலும் சித்திரங்கள் கலக்கலாக இருக்கிறது. விதவிதமான விலங்குகளை தரமான சித்திரங்களில் பார்ப்பது நல்ல அனுபவமாக இருக்கிறது.கதையில் வரும் விதவிதமான விலங்குகள் குழந்தைகளை கவரும். நூலாசிரியர் விலங்குகள் ஆரய்ச்சியாளர் என்பதினால் இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்திருக்கலாம் எனபது என் யூகம். எப்படியிருந்தாலும் தமிழில் சித்திரக்கதை வெளியிட்டிருக்கும் இராஜதிலகம் அவர்களுக்கு நன்றிகள்.




ஆசிரியர் குறிப்பில் இவரது சித்திரக்கதைகள் தொடர்ந்து மணிமேகலை பிரசுரத்தில் வெளிவரும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள். இனி வரும் இதழ்களில் கதையிலும் மொழிபெயர்ப்பிலும் இன்னும் சற்று கவனம் செலுத்த வேண்டும் என்பது என் விருப்பம்.


கதை முடிவில் சம்பந்தமே இல்லாமல் மாயாஜால காமிக்ஸ் என குறிப்பிடுகிறார்கள். அது என்னவென்று தெரியவில்லை.

பதிப்பகம் - மணிமேகலை பிரசுரம்

ஆசிரியர் - இராஜதிலகம்

விலை - ரு. 50

பக்கங்கள் - 72

புத்த்கம் வாங்க - 04424342926, 04424346082

3 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே, மீண்டும் உங்களிடமிருந்து ஓர் புது அறிமுகம்.

கதையில் இருக்கும் ஓட்டைகளை விட்டு விடலாம். சித்திரங்கள் நன்றாக உள்ளன. ஆனால் யார் வரைந்தது என்று தெரியவில்லை. இவரின் சித்திரத் தொடர்கதைகள் என்று வேறு ஆசிரியர் அறிமுகத்தில் போட்டிருக்கிறது குழப்புகிறது.

கதை நடக்கும் காலத்தின் நிகழ்வுகள் குறித்து ஆசிரியர் தன் அறிவைப் பெருக்கிக் கொண்டால் நல்லது என்றே எண்ணுகிறேன் :)) இல்லையெனில் எல்லாருக்கும் குழப்பம்தான்.

Rafiq Raja said...

இன்னொரு தமிழ் காமிக்ஸ் இதழுக்கான அறிமுகத்திற்கு நன்றிகள் சிவ்.

வழக்கம் போல படைப்பாளர்களின் பெயர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருட்டிப்பு செய்திருக்கிறார்கள். இந்தியாவில் வெளிவரும் பல காமிக்ஸ் இதழ்களுக்கு இதுதான் கதி போல...

இந்த சித்திரங்கள் எனக்கு டெல் காமிக்ஸ் வெளியிட்ட டுராக் என்ற கதாபாத்திரம் ஒத்தி இருப்பது போல இருக்கிறது. மேலும் படிக்க இங்கே சுட்டவும்: http://en.wikipedia.org/wiki/Turok

தமிழில் மொழிபெயர்க்கபட்டிருக்கென்ற ஒரே சந்தோஷத்தை தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. வாக்கியங்கள் முறையாக வடிவமைக்கபடாமல், ஏதோ கடமையே என்று மொழிபெயர்த்தது போல இருக்கிறது. 50 ரூபாய் விலையில், கொஞ்சம் அதிக சிரத்தை எடுத்திருக்கலாம்.

நீங்கள் கூறியபடி அடுத்த இதழ் வெளிவந்தால் இன்னும் சிறப்பாக வெளியாகலாம் என்று நம்புவோம்.

SIV said...

டுராக் பற்றிய தகவலுக்கு நன்றி. wikipedia வில் இருக்கும் கதாபாத்திரம் பற்றிய அறிமுகத்தை வைத்து பார்க்கும் போது எனக்கும் டுராக் தான் தாராவாக்கப்பட்டிருக்கிறார் என படுகிறது.
இருக்கும் பல குறைகளை களைந்து அடுத்த இதழ் வர வேண்டும் என்பதே என் விருப்பம்